பெண்களே உஷார்.. அழகு சாதனப் பொருட்களில் இவ்வளவு ஆபத்தா?.. 18 பேருக்கு சிறுநீரக பாதிப்பு.. அதிர வைத்த ஆய்வு!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சருமத்தை நிறம் மாற்றும் நோக்கத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சில ஃபேர்னஸ் கிரீம்கள் தொடர்பாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட கிரீம்களை தொடர்ந்து பயன்படுத்திய 18 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுபோன்ற பாதிப்புகளுடன் வந்த நோயாளிகளை ஆய்வு செய்தபோது, அவர்கள் பயன்படுத்திய அழகு சாதனப் பொருட்களுக்கு இடையே தொடர்பு இருப்பது கவனிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் முக்கியமாக Goree Beauty Cream என்ற ஃபேர்னஸ் கிரீம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த கிரீம் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதாகவும், இந்தியாவில் அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாத வழிகளில் விற்பனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் இதனை ஆன்லைன் தளங்கள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் வாங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட கிரீம்களின் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில், குறிப்பிட்ட மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பாதரசம் (Mercury) இருப்பது கண்டறியப்பட்டது. மகாராஷ்டிரா FDA-வின் தரநிலை எச்சரிக்கைப் பட்டியலிலும் Goree Beauty Cream உள்ளிட்ட சில பொருட்கள் பாதரச அளவு தொடர்பான விதிமுறைகளை பின்பற்ற என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.3,400 கோடி சொத்து.. தெருவில் பிச்சை எடுத்த பாஜக எம்எல்ஏ.. இது தான் காரணமா?

பாதரசம் உள்ளிட்ட கனரக உலோகங்கள் அதிக அளவில் உடலில் சேர்வது சிறுநீரகங்கள் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, தொடர்ந்து பயன்படுத்தப்படும் தரமற்ற சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் மூலம் பாதரசம் உடலுக்குள் சென்று பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) Goree Beauty Cream உள்ளிட்ட சில சருமத்தை நிறம் மாற்றும் அழகு சாதனப் பொருட்களின் விற்பனை மற்றும் விநியோகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இதுபோன்ற பொருட்கள் ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுவது குறித்தும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், சரும நிறத்தை மாற்றுவதாகக் கூறப்படும் அழகு சாதனப் பொருட்களை வாங்கும்போது அவற்றின் தயாரிப்பு விவரங்கள், உரிய அனுமதி மற்றும் தரச் சான்றுகள் உள்ளிட்டவற்றை கவனிக்க வேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கட்டுப்பாடற்ற அல்லது சந்தேகத்திற்குரிய வழிகளில் விற்பனை செய்யப்படும் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய உடல்நல அபாயங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: சூனியம் வைத்ததாக சந்தேகம்.. மருமகளை கோடரியால் தாக்கிய 70 வயது மாமனார்.. நாக்பூரில் அதிர்ச்சி!