மக்களுக்கு இப்படி ஒரு நிலைமையா? அறங்காவலர்களை ஒதுக்கிவிட்டு நடந்த அராஜகம்! 17 ஆண்டுக்கு பிறகு நடந்த மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகக் குளறுபடியில் கொந்தளித்த பிடிஆர்...!!!
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், விழா ஏற்பாடுகள் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. பக்தர்கள் அலைக்கழிக்கப்பட்டதாகவும், விஐபி கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு புனித நீருக்குப் பதிலாக குடிநீர் தெளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடுமையான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறங்காவலர்களை புறக்கணித்ததாக பிடிஆர் குற்றச்சாட்டு
தனது அறிக்கையில், கும்பாபிஷேக நிகழ்வு இந்து சமய அறநிலையச் சட்டங்களுக்கும், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிரான வகையில் நடத்தப்பட்டுள்ளதாக பிடிஆர் தெரிவித்துள்ளார். அனுபவம் வாய்ந்த கோயில் அறங்காவலர் குழுவின் ஆலோசனைகளைப் புறக்கணித்துவிட்டு, அனுபவமில்லாத அதிகாரிகளை வைத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதே பக்தர்கள் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்படும் நிலைக்கு காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: மதுரைக்கு குவியும் பக்தர்கள.. 285 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
மேலும், விழா ஏற்பாடுகளில் ஏற்பட்டதாக கூறப்படும் குளறுபடிகள் குறித்து அவர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானதாகவும், நிகழ்வை ஒருங்கிணைப்பதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பணிகளில் 95 சதவீதம் முடிந்ததாக தகவல்
கோயிலில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் குறித்தும் பிடிஆர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் 95 சதவீதத்திற்கும் அதிகமான திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டதாகவும், தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபத்தை மீட்டெடுத்தது உள்ளிட்ட முக்கிய பணிகள் அப்போது மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கும்பாபிஷேகத்துக்கான பெரும்பாலான களப்பணிகள் முந்தைய ஆட்சிக் காலத்திலேயே முடிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதிக்கட்ட விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதில் தற்போதைய தவெக அரசு தோல்வியடைந்ததாகவும் பிடிஆர் குற்றம் சாட்டியுள்ளார். அவரது இந்த விமர்சனம், மதுரை கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தொடர்பான அரசியல் விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.