கரூர் விவகாரம்?.. 2 சொட்டுக் கண்ணீருக்கு மயங்காதீர்கள்.. தவெகா-வை மீண்டும் சீண்டிய விஜய் சேதுபதி!
பிக்பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் விஜய் சேதுபதி, பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் தங்களது செயல்களுக்கு பதில் அளிக்காமல் கண்ணீர் விட்டு அனுதாபம் தேடக் கூடாது என பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, இரண்டு சொட்டுக் கண்ணீருக்கு மயங்கிவிடாதீர்கள். பொறுப்பில் இருப்பவர்கள் பதில் சொல்லாமல் அழுது சமாளிக்கக் கூடாது. அப்படி மயங்கினால் ஜோக்கர் ஆகிவிடுவீர்கள் எனக் கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும், அவரது இந்தக் கருத்துகள் அரசியல் ரீதியாக தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தவறுகள் அல்லது சர்ச்சைகள் எழும்போது அதற்கு விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக உணர்ச்சிப்பூர்வமாகப் பேசி மக்களின் அனுதாபத்தைப் பெறும் அணுகுமுறையை விஜய் சேதுபதி விமர்சித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டில் முதல்வர் விஜய்?.. உதயநிதி காட்டமான கேள்வி!
இந்த நிலையில் விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சுக்கு திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில், கரூர் சம்பவத்தை குறிப்பிட்டு அவர் கருத்து பதிவிட்டுள்ளார்.
கரூர் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை வீட்டில் சென்று பார்க்காமல்..
சென்னைக்கு வரவைத்து 2 சொட்டு கண்ணீர் விட்டவரின் சாயத்தை வெளுத்து தொங்கவிட்ட விஜய சேதுபதி. https://t.co/7fkPcir2rH
— Blue Sattai Maran (@tamiltalkies) September 14, 2026
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரடியாகச் சென்று சந்திக்காமல், அவர்களை சென்னைக்கு வரவழைத்து கண்ணீர் விட்டதாக விமர்சித்துள்ள ப்ளூ சட்டை மாறன், விஜய் சேதுபதியின் பேச்சு மூலம் இதுபோன்ற செயல்பாடுகளின் மீதான விமர்சனம் வெளிப்பட்டுள்ளதாக தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, விஜய் சேதுபதி குறிப்பிட்டது யாரை என்பது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பிட்ட எந்த ஒரு நபரின் பெயரையும் அவர் நேரடியாகக் குறிப்பிடாத நிலையில், அவரது பேச்சை அரசியல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் சேதுபதியின் பேச்சும், அதற்கு ப்ளூ சட்டை மாறன் தெரிவித்த ஆதரவும் இணைந்து சமூக வலைதளங்களில் தற்போது கவனம் பெற்றுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆதரவும் எதிர்ப்பும் கலந்த பல்வேறு கருத்துகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இதையும் படிங்க: திமுக சொம்பு என சாடிய பிரசாந்த்.. விஜய் சேதுபதி மீது பாய்ந்த விமர்சனம்!