காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டில் முதல்வர் விஜய்?.. உதயநிதி காட்டமான கேள்வி!



Udhayanithi troll cm vijay for Periyar parade

தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற இருந்த பேரணிகளுக்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பதாகக் கூறி, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் பிறந்த ஈரோடு மண்ணில் திராவிடர் கழகம் சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு குடியாத்தத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பேரணிக்கும் காவல்துறை அனுமதி மறுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரு பேரணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, வலதுசாரி அமைப்புகள் நடத்தும் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் முக்கிய பங்காற்றிய பெரியார்–அண்ணாவின் பிறந்தநாள் பேரணிகளுக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: தன் மகனையே ஒழுங்கா வளர்க்கல... அப்புறம் எப்படி கட்சியை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பார்? ஆபாசம் மற்றும் அவதூறு தான் திமுகவின் கலாச்சாரம்..! அமைச்சர் ரமேஷ் சரமாரி விமர்சனம்!!!

மேலும், பெரியாரையும் அண்ணாவையும் தங்களது கொள்கைத் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர், யாரை திருப்திப்படுத்துவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்றும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டதா? என்றும் அவர் தனது பதிவில் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து, பெரியார்–அண்ணாவை புறக்கணிக்கும் “Reels முதலமைச்சர்” என்று முதலமைச்சரை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், அரசின் செயல்பாடுகளையும், அதன் அணுகுமுறையையும் மக்கள் கவனித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் “அடிமைத்தனத்தையும், ஆணவத்தையும்” மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, பெரியார்–அண்ணா பிறந்தநாளையொட்டி நடைபெறவுள்ள பேரணிகளுக்கு உடனடியாக காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: உங்களுக்கான ஆப்பை நீங்களே வைத்துக்கொண்டீர்கள்.. திமுகவை விளாசிய புளூ சட்டை மாறன்!