பாஜக நிர்வாகி மீது பெண் நிர்வாகி புகார்.. மாநில பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்!



Karuppu muruganantham dismiss in BJP

தமிழக பாஜகவில் மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்த கருப்பு முருகானந்தம் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சி நிர்வாகி ஒருவர் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளர் திவ்யா சேஷாத்ரி, கருப்பு முருகானந்தம் மீது உடல் ரீதியான துன்புறுத்தல், மன உளைச்சல், மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியின் தேசிய மற்றும் மாநில தலைமையிடம் புகார் அளித்திருந்தார். புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை அவரை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

மேலும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதாகவும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தருவதாக உறுதியளித்ததாகவும் திவ்யா சேஷாத்ரி தனது புகாரில் தெரிவித்திருந்தார். தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக மின்னணு ஆவணங்கள் மற்றும் சாட்சிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இவை அனைத்தும் புகார்தாரர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பரபரப்பு! பாஜக அலுவலகத்தில் இரவு முழுவதும் மண்டல தலைவர்கு நடந்த சித்திரவதை! பைப், தடி, பெல்ட்டால் அடித்து... கொடூர மிரட்டல்!!!

இதனிடையே, தன் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து தனக்கு முழுமையாகத் தெரியாது என கருப்பு முருகானந்தம் தெரிவித்திருந்தார். புகாரின் விவரங்களை அறிந்த பிறகு அதுகுறித்து விளக்கம் அளிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், கருப்பு முருகானந்தத்தை மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையாக இது அமைந்துள்ள நிலையில், புகாரில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை விவரங்கள் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: சற்று முன்.... பாஜகவிலிருந்து விலகி தவெகவில் ஐக்கியம்..! பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத்குமார்! வெளியிட்ட பரபரப்பு பதிவு...!!!