கந்து வட்டி கேட்டு மிரட்டிய தம்பதியினர்: கண்ணீருடன் காவல் நிலையத்தில் நின்ற பெண்..!

கந்து வட்டி கேட்டு மிரட்டிய தம்பதியினர்: கண்ணீருடன் காவல் நிலையத்தில் நின்ற பெண்..!



The couple who threatened usury

கோயம்புத்தூர் மாவட்டம், பீளமேடு அருகேயுள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தில் ஓம் விநாயகா வீதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி அமுதா (38). இவர் டெய்லர் தொழில் செய்து வருகிறார். இவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு சிங்காநல்லூர் மூகாம்பிகை நகரைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி அம்பிகா ஆகியோரிடம் இருந்து, ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணம் 6 சதவீத வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.

கடனுக்கு ஈடாக வெற்று பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார். மேலும் தனது பெயரில் மற்றும் அவரது கணவர் பெயரில் உள்ள வங்கி காசோலைகள் 16 கொடுத்துள்ளார். அதன் பின்னர் அமுதா வட்டியும், அசலும் சேர்த்து ரூ. 2 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். அதன் பின்னர் தன்னிடம்  இருந்து அவர்கள் வாங்கி வைத்த வெற்று காசோலைகள் மற்றும் வெற்று பத்திரத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர்கள் அவற்றை திருப்பி தர மறுத்துடன், நீ கொடுத்த பணம் வட்டிக்கு சரியாகி போய் விட்டது. எனவே இன்னும் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொடுத்தால் தான் தருவோம் என மிரட்டியுள்ளனர். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அமுதா, பீளமேடு காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், அதிக வட்டி கேட்டு மிரட்டியதாக தம்பதியினர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.