எந்தவொரு தவறும் இல்லாமல் எப்படி சஸ்பெண்ட் செய்யலாம்.? உடனே அமைச்சரை வரச்சொல்லுங்க..! கொந்தளிக்கும் மாணவர்களின் பெற்றோர்.!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாப்பான்விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் நிதிஷ்குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பள்ளியிலிருந்து ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, பின்னர் மாணவனை நேரடியாக வீட்டில் கொண்டு ஆசிரியர் ஒருவர் வீட்டில் விட்டுள்ளார்.
இதனையடுத்து நிதிஷ்குமாரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மாணவன் சாவில் சந்தேகம் இருப்பதாக நிதிஷ்குமாரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மகேஸ்வரி, வகுப்பு ஆசிரியர் ஆரோக்கிய அமல்ராஜ் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.
இந்தநிலையில் அப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர்கள் மீது எந்த தவறும் இல்லை. எதன் அடிப்படையில் இரண்டு ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்தீர்கள். உடனே அமைச்சர் மெய்யதனை இங்கு வரவழைத்து பள்ளியில் நடந்ததை விசாரிக்கச்சொல்லுங்கள். இரண்டு ஆசிரியர்களின் பணியிடை நீக்கத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இரண்டு ஆசிரியர்கள் மீண்டும் வரும்வரை இந்த போராட்டம் தொடரும் என கூறுகின்றனர் மாணவர்களும், பெற்றோர்களும்.