தாக்குதல் + பாலியல் தொல்லை.. மன உளைச்சலில் விவசாயி தற்கொலை! ராமநாதபுரத்தில் பரபரப்பு!



Former suicide in Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே தாக்குதல் மற்றும் பாலியல் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படும் விவசாயி, விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் அருகே உள்ள கீழப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன் (35). விவசாயியான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கீழப்பெருங்கரையில் உள்ள தனது தோட்டத்தில் கார்த்தீஸ்வரன் வேலை செய்து கொண்டிருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் கஞ்சா போதையில் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது அவரை தாக்கியதுடன், பாலியல் ரீதியாக தொல்லை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கார்த்தீஸ்வரன், கடந்த 4 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட குடும்பத்தினர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து பார்த்திபனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்.. மாணவி எடுத்த விபரீத முடிவு.. கண்ணீரில் குடும்பத்தினர்.! 

ramanathapuram

இதற்கிடையே, கார்த்தீஸ்வரனின் தற்கொலைக்கு காரணமானதாக கூறப்படும் கஞ்சா வாலிபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவரது உறவினர்கள் நேற்று மாலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்புள்ள நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உன்னோட ஆபாச வீடியோ இருக்கு.. லீக் பண்ணவா? விபரீத முடிவெடுத்த பெண்.. பெண்களே உஷார்.!