ஊரடங்கு மேலும் நீட்டிக்கப் படுகிறதா.? பிரதமர் மோடியுடன் பேசிய முதலமைச்சர்கள்!

கொரோனாவின் தாக்கம் குறையாததால் ஊரடங்கை நீட்டிப்பது அவசியம் என்று பிரதமர் மோடியிடம் மாநில முதலமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 25-ந் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு வருகிற மே 3-ந் தேதியுடன் முடிவுக்கு வர இருக்கும் நிலையில், கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைகள் குறித்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடியுடன் உள்துறை மந்திரி அமித்ஷா, சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் மற்றும் பிரதமர் அலுவலக, சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக முதலமைச்சர்களின் கருத்துகளை பிரதமர் மோடி கேட்டு அறிந்தார். ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பேசிய பெரும்பாலான முதலமைச்சர்கள், நாட்டில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாததால் மே 3-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது அவசியம் என்று வலியுறுத்தி உள்ளனர்.