இரட்டை இலையும் தப்பியது; எடப்பாடி தலையும் தப்பியது: சின்னம் மற்றும் பொதுக்குழுவுக்கு எதிரான இரு வேறு வழக்குகளும் தள்ளுபடி.!

அ.தி.மு.க வில் ஓற்றை தலைமை குறித்த விவாதம் எழுந்த நாளில் இருந்தே உட்கட்சி பூசலும் எழுந்தது. கடந்த மாதம் சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்தது. இதன் காரணமாக இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று ஒரு வழக்கும், உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது.
அ.தி.மு.க. முன்னாள் உறுப்பினரும், ஜே.ஜே.கட்சியின் நிறுவனருமான பி.ஏ.ஜோசப் என்பவர் இரட்டை இலை சின்னத்தை முடக்க மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 5000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக மேலும் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், இதன் காரணமாக இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய வழக்கு விளம்பர நோக்கில் தொடரப்பட்ட வழக்கு என்று கண்டித்த நீதிபதிகள், மனு தாக்கல் செய்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.
தீர்மானங்களை நிராகரித்தது மற்றும் அவைத்தலைவர் தேர்வு உள்ளிட்டவை கோர்ட்டை அவமதிக்கும் செயல் என அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் கோர்ட் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளதாக கூறி இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.