ஆடியோ சர்ச்சையால் அ.தி.மு.க-வில் சலசலப்பு: எடப்பாடியின் கூடாரத்தில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி..?!



the-audio-released-by-the-ops-has-created-controversy

எடப்பாடி பழனிசாமியை 9 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரிப்பதாக அ.தி.மு.க மூத்த தலைவர் பொன்னையன் பேசியதாக ஓ.பி.எஸ் தரப்பினர் வெளியிட்ட ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அ.தி.மு.க நிர்வாகிகளை விமர்சித்து, பொன்னையன் பேசியதாக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள ஆடியோ அக்கட்சினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அந்த ஆடியோ மோசடியாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தனது குரலை மிமிக்ரி செய்து நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர் என்றும் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவர்கள் கூறும் தேதியில் தான் யாரிடமும் தொலைபேசி வாயிலாக பேசவில்லை என்றும் இது குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு பரப்பபடுவதாக பொன்னையன் கூறியுள்ளார்.

இதற்கிடையே, பொன்னையனின் கருத்தை மறுத்துள்ள கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகி நாஞ்சில் கோலப்பன், ஜூலை 9 ஆம் தேதி இரவு 9.59 மணிக்கு பொன்னையன் தன்னுடன் பேசியதாகவும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும் பொன்னையன் போன்று மிமிக்ரி செய்து ஆடியோ வெளியிட வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்று கூறியுள்ளார்.