அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு : அடித்து நொறுக்கப்பட்டது பாஜக அலுவலகம்..!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு : அடித்து நொறுக்கப்பட்டது பாஜக அலுவலகம்..!



opposition-to-agnipath-project-bjp-office-smashed

பீகாரில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் பாஜக கட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

பீகாரில் இளைஞர்கள் அக்னி வீரர்கள் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்திய ராணுவத்தில் அக்னிபாத் என்ற திட்டத்தை உருவாக்கி அக்னி வீரர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை மத்திய அரசு நேற்று அறிவித்தது. இத்திட்டத்தின்கீழ் நியமிக்கப்படும் வீரர்கள், அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள் நான்கு ஆண்டுகள் வேலையில் இருப்பார்கள், அதன் முடிவில் அவர்களுக்கு 10 லட்சம் வரி பிடித்தம் இல்லாமல் வழங்கப்படும். அத்துடன் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் இந்த அக்னிபாத் திட்டம் மூலம் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வீரர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதிகாரிகளுக்கு கீழேயுள்ள பதவியில் இந்த அக்னிபாத் வீரர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்கிடையில் ஆறு மாத இடைவெளியில் முப்படைகளுக்கும் ஆன வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அக்னிபாத் முறை மூலம் பணியில் சேர்க்கப்படும் வீரர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி அளிக்கப்படும். மேலும் 3.5 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். பிறகு 25% பேர் மட்டும் இவர்களில் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

இந்நிலையில் இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்றும் 25% பேர் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம்  வேலையில் சேரமுடியும் என்று கூறி பீகாரில் இளைஞர்கள், நெடுஞ்சாலைகளில் டயர்களை கொளுத்தி மறியல் போராட்டம் செய்தனர். பீகாரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இளைஞர்கள் போராட்டம் செய்த நிலையில், இன்றும் இரண்டாவது நாளாக அங்கு போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தால் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.

மேலும் பாட்னா முசாபர்பூர் பக்கர் ஜெகநாத் போன்ற பகுதிகளில் இளைஞர்கள் சாலைகளிலும் ரயில் நிலையங்களிலும் போராட்டம் செய்தனர். மேலும் சாலைகளில் டயர்களை எரித்தும் பஸ்கள் மீது கல் வீசியும் கலவரத்தில் ஈடுபட்டனர். அரசின் அக்னி வீரர்கள் திட்டத்தால் இளைஞர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் பாபுவா ரோடு ரயில் நிலையத்தில் கலவரக்காரர்கள் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கற்களை வீசி ரயிலின் ஒரு பெட்டியில் தீ வைத்துள்ளார்கள். இதனால் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பாதுகாப்பு பணிகள் இருந்த காவல்துறையினர் மீது கற்களை வீசி அவர்களை தாக்கினர். இதனால் காவல்துறையினர் கண்ணீர் புகையை பயன்படுத்தினார். இந்த கலவரத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் உத்தர பிரதேசம் ஜார்கண்ட் மராட்டியம் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.