கேரளாவில் ஆசிரமத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்! சபரிமலை பிரச்சனை தான் காரணமா?

கேரளாவில் ஆசிரமத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்! சபரிமலை பிரச்சனை தான் காரணமா?



kerala-ashram-set-on-fire

சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பதற்கு ஆதரவாக குரல் கொடுத்த சாமியாரின் ஆசிரமம் திருவனந்தபுரத்தில் மர்ம நபர்களால் நள்ளிரவில் தீ வைக்கப்பட்டது.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து கேரளாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. மேலும் சபரிமலை நடை திறந்த பின்பு மலைக்கு செல்ல முயன்ற பெண்களை பலர் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மூடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நபர்களை கேரள காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

நீதிமன்றத் தீர்ப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் தொடர்ந்து மர்மநபர்களால் தாக்கப்படுகின்றனர். இந்த தீர்ப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்த நபர்களில் ஒருவர் சுவாமி சந்தீபனந்தா கிரி ஆவார். இவர் திருவனந்தபுரத்தை ஒட்டியுள்ள பகுதியில் ஆசிரமம் ஒன்று நடத்தி வருகிறார். மேலும் பகவத் கீதா என்ற கல்வி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

Kerala ashram set on fire

சுவாமி சந்தீபனந்தா கிரி பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்த பின் பலமுறை மர்மநபர்களால் மிரட்டப்பட்டுள்ளார். சுவாமி சந்தீபனந்தா கிரி மற்றும் மற்றொரு நபர் மட்டும் அந்த ஆசிரமத்தில் தங்கியுள்ளனர். 

நேற்று இரவு வழக்கம் போல் சுவாமி மற்ற மற்றொரு நபரும் ஆசிரமத்தின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஆசிரமத்தின் வெளிப்பகுதியில் மர்மநபர்களால் தீ வைக்கப்பட்டது. இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அலறி அடித்து சத்தம் போடவே சுவாமி ஆசிரமத்திற்கு தீ வைக்கப்பட்டதை அறிந்து கொண்டார். தீயணைக்கும் வண்டிகள் உடனே வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டதனால் சுவாமி மற்றும் அந்த நபர் எந்தவித காயமும் ஏற்படாமல் தப்பினர். ஆசிரமத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு கார், இருசக்கர வாகனம் மட்டும் தீக்கிரையாகின.

Kerala ashram set on fire

இதனைத் தொடர்ந்து இன்று காலை கேரள முதல்வர் பினரயி விஜயன் ஆசிரமத்தை பார்வையிட்டார் அப்போது பேசிய அவர் "சட்டம்-ஒழுங்கை யாரும் கையில் எடுக்க கூடாது. சுவாமியின் நடவடிக்கையை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் இப்படி ஒரு காரியத்தை செய்து உள்ளார்கள். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறினார்.