“வீட்டில் மாட்டிறைச்சி சமைக்கக் கூடாது!”.. வாடகைதாரருடன் மோதல்.. கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண் கைது!
கனடாவில் வீட்டு உரிமையாளருக்கும் வாடகைதாரருக்கும் இடையே மாட்டிறைச்சி சமைத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர் ராஜ் திவான் வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் நபர் ஒருவர் தனது நண்பருடன் வீட்டின் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பார்பிக்யூவில் மாட்டிறைச்சி சமைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த வீட்டு உரிமையாளர் ராஜ் திவான், அவர்கள் அங்கு சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை வாடகைதாரரின் நண்பர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். வெளியாகியுள்ள மற்றொரு வீடியோவில், பார்பிக்யூவில் சமைக்கப்பட்டிருந்த உணவை ராஜ் திவான் அப்புறப்படுத்துவதும், தனது வீட்டில் இதுபோன்று சமைக்க அனுமதிக்க முடியாது என்று அவர் கூறுவதும் பதிவாகியுள்ளது.
கனடாவில் மாட்டிறைச்சி சமைத்ததற்காக வாடகைதாரரை மிரட்டி தாக்கிய இந்திய வம்சாவளி பெண் ராஜ் திவானாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவலான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
#Kanada #beef https://t.co/2SFEu5Yn25
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) September 12, 2026
இதனைத் தொடர்ந்து வாடகைதாரர், ராஜ் திவான் தன்னை மிரட்டியதாகவும், தான் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பூட்டுகளை மாற்றியதாகவும் குற்றம்சாட்டி சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வாடகைதாரர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு கனடா போலீசார் வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் ராஜ் திவான் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், ராஜ் திவான் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. இதனால், சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.