உறங்கிக்கொண்டிருந்த முதிய கணவன் - மனைவி கொடூர கொலை.. அக்கம் பக்கத்தை அதிரவைத்த இரட்டைக்கொலைகள்.!
வட்டித்தொழில் செய்து வரும் முதியவர் மற்றும் அவரின் மனைவி மர்ம கும்பல் நள்ளிரவில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், தெற்கு வைத்தியநாதபுரத்தில் வசித்து வருபவர் ராஜகோபால் (வயது 75). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். ராஜகோபாலின் மனைவி குருபாக்யம் (வயது 68). தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் கோவை மற்றும் சென்னையில் இருக்கிறார்கள்.
ராஜகோபால் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த நிலையில், பலருக்கும் இலட்சக்கணக்கில் பணம் குடுத்து வாங்குவது வழக்கம். மேலும், பணம் கொடுக்கல் - வாங்கலில் முன்விரோதமும் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று ராஜகோபால் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கதவுகள் திறந்தே இருந்தது.
இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ராஜகோபால் மற்றும் குருபாக்கியம் ஆகியோர் பிணமாக இருந்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், நள்ளிரவு நேரத்தில் கொலை நடந்ததும், கொலைக்கு பின்னர் வீட்டில் மிளகாய் பொடி தூவி சென்றதும் தெரியவந்தது. நிகழ்விடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமிராக்கள் அனைத்தும் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. பணப்பிரச்சனை காரணமாக கொலை நடந்ததா அல்லது முன்விரோதத்தால் கொலை நடந்ததா? என விசாரணை நடந்து வருகிறது.