படிக்கட்டு பயணத்தால் பரிதாபம்.. செல்போனால் வந்த வினை.. முதியவர் துடிதுடித்து உயிரிழப்பு..!

முதியவர் படிக்கட்டில் பயணம் செய்யும்போது செல்போன் தவறி படிக்கட்டிலேயே விழுந்துவிட, அதனை எடுக்க முயற்சித்து உயிர் பலியான சோகம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், முகவூர் கிருஷ்ணன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கடற்கரை (வயது 60). இவர் சொக்கநாதன்புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல்சூளையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க இராஜபாளையத்திற்கு பேருந்தில் சென்றுள்ளார். இவர் பேருந்தின் படிக்கட்டில் நின்றுகொண்டு செல்போனில் பேசியபடி பயணம் செய்துள்ளார்.
அப்போது, அவரின் செல்போன் எதிர்பாராதவிதமாக தவறி படிக்கட்டில் விழுந்துவிடவே, அதனை எடுக்க கடற்கரை முயற்சித்துள்ளார். பேருந்து வளைவான சாலையில் திரும்பிய நிலையில், படிக்கட்டில் செல்போனை எடுக்க முயற்சித்தவர் தவறி கீழே விழுந்துள்ளார்.
இதனால் பலத்த காயத்துடன் உயிருக்கு துடித்தவரை மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கடற்கரை பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக செங்கல்சூளை அதிபர் ரகுராம் சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.