உள்புறமாக பூட்டப்பட்ட கதவு.! டியூசன் ஆசிரியை சரமாரியாக குத்திக் கொலை.!

உள்புறமாக பூட்டப்பட்ட கதவு.! டியூசன் ஆசிரியை சரமாரியாக குத்திக் கொலை.!



tuition-teacher-murdered

திருநெல்வேலி பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியை சேர்ந்த கோயில்பிச்சை என்பவரின் மனைவி உஷா. 42 வயது நிரம்பிய இவர் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், விருப்ப ஓய்வு பெற்றிருந்தார். கடந்த சில மாதங்களாக வீட்டில் மாணவிகளுக்கு டியூசன் சொல்லிக்கொடுத்து வந்துள்ளார். இவருக்கு நீனா, ரீனா என்று இரு மகள்கள் உள்ளனர். இதில் நீனா என்ஜினீயரிங்கும், ரீனா பட்டப்படிப்பும் படித்துள்ளனர். இவர்கள் 2 பேரும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. 

கோயில் பிச்சை வெளியூரில் வசித்து வருவதால் உஷா தனது மகள்களை கவனித்து வந்துள்ளார். உஷா தனது மகள்களை வீட்டை விட்டு வெளியே எங்கும் அழைத்துச் செல்லமாட்டார். எந்த பொருட்கள் வாங்க வேண்டுமானாலும் உஷா மட்டுமே வெளியே சென்று வாங்கி வருவார். எப்போதும், அவரது வீட்டின் கதவு பூட்டப்பட்டே இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் உஷா அலறல் சத்தம் போட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உஷாவின் வீட்டின் கதவை திறக்க முயற்சித்தனர். ஆனால் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, உஷா கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

போலீசார் உஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உஷாவின் உடல் அருகே நீனா, ரீனா ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தாய் இறந்தது கூட தெரியாமல் 2 இளம்பெண்களும் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.