குடிகார தந்தையால் 9 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கதி!,, கதி கலங்க வைக்கும் கொடூர முடிவு..!



the-fate-of-the-9th-class-girl-due-to-her-alcoholic-fat

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் (22). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மாணவியின் தந்தைக்கு குடிப்பழக்கம் இருப்பதை அறிந்த பிரதாப், அவரிடம் நைசாக பேசி பாக்கெட் சாராயத்தை மாணவியின் தந்தைக்கு கொடுத்து வீட்டில் மயக்கம் போட வைத்துள்ளார்.

அதன் பின்பு, மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இது கடந்த சில காலமாக தொடர்ந்து நீடித்து வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பிரதாப்பின் நண்பர் புவனேஷ் என்பவருக்கும் தெரியவந்துள்ளது.இதனையடுத்து மாணவியை சந்தித்த புவனேஷ் ஆறுதலாக பேசுவது போன்று நடித்துள்ளார். இதன் பின்னர் பிரதாப்பை போன்றே மாணவியின் தந்தைக்கு சாராயம் வாங்கிக் கொடுத்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அடிக்கடி தனித்தனியாக 2 இளைஞர்கள் மாணவியின் வீட்டிற்கு வந்து செல்வதை பார்த்த கிராம மக்கள் மாணவியை கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதன் காரணமாக மனமுடைந்த மாணவி, நேற்றிரவு துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போதை தெளிந்து காலையில் எழுந்த மாணவியின் தந்தை தனது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. மாணவி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்த போது புவனேஷ் மற்றும் பிரதாப் ஆகிய இருவரும் மாணவியுடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், இந்த விவகாரத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. காவல்துறையினர் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.