25 இளம் ஆட்டுக்குட்டிகளை கடித்து குதறிய நாய்கள்! துடிதுடித்த ஆட்டின் உரிமையாளர்!
25 இளம் ஆட்டுக்குட்டிகளை கடித்து குதறிய நாய்கள்! துடிதுடித்த ஆட்டின் உரிமையாளர்!
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராசு என்பவர் செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். செம்மறி ஆடு வளர்ப்பவர்கள் பருவமழை முடிந்துவிட்டால், காவிரி டெல்டா பகுதியில் ஆடுகளை மேய்ப்பது வழக்கம். ஆனால் காவிரி டெல்டா பகுதியில் இன்னும் கதிர் அறுவடை செய்யப்படாததால், கோவிந்தராசு ஆடுகளை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் செம்மறி ஆடுகளை ஓட்டி வந்து மேய்த்து வந்துள்ளார்.
பொதுவாக ஆடு வளர்ப்பவர்கள் பகலில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று இரவில் விவசாயிகளின் தோட்டங்களில் வலை தடுப்புகளை ஏற்படுத்தி கிடை அமைத்து, அவற்றுக்குள் ஆடுகளை அடைத்து பாதுகாத்து வருவார்கள். அங்கு ஆடுகளின் சாணம் விவசாயத்திற்கு உரமாக பயன்படுவதால் ஆட்டின் உரிமையாளர்களுக்கு விவசாயிகள் பணம் கொடுப்பார்கள்.
இந்தநிலையில் கொத்தமங்கலத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்தில் கிடை அமைத்து ஆடுகளை மேய்த்து வந்துள்ளார் கோவிந்தராசு. பகலில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லும்பொழுது இளம் குட்டிகளை ஆடுகளுடன் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல முடியாது என்பதால், வலை தடுப்புகளுக்குள் கூடை அமைத்து அதற்குள் குட்டிகளை அடைத்து வைத்துவிட்டு, ஆடுகளை மேய்த்து வந்துள்ளார்.
பகலில் ஆடுகளை மேய்க்கச்சென்று இரவு நேரத்தில் ஆடுகளுடன் திரும்பி வந்துள்ளார். அப்போது இளம் குட்டிகளுக்கு பால் கொடுக்கவேண்டும் என்பதற்காக வலைக்குள் வந்துள்ளார். அப்போது கூடைக்குள் அடைக்கப்பட்டிருந்த 25 ஆட்டுக்குட்டிகள், நாய்களால் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்தன. இதனைப்பார்த்த பார்த்த கோவிந்தராசு கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.