தீயில் கருகிக்கிடந்த விவசாய குடும்பம்.. பிரேதப் பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல்..

தீயில் கருகிக்கிடந்த விவசாய குடும்பம்.. பிரேதப் பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல்..


Palani 4 family members buried death news updates

விவசாயி ஒருவர் தனது குடும்பத்தினருடன் தீயில் கருகி உயிரிழந்துகிடந்த வழக்கில் பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பழனி அருகே உள்ள வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு என்கிற முருகேசன் (52). இவருக்கு வளர்மதி (45) என்கிற மனைவியும், சிவரஞ்சனி (21) என்ற மகளும், கார்த்திகேயன் (18) மகனும் உள்ளனர். மகன், மகள் இருவரும் கல்லூரியில் படித்துவந்தநிலையில் சின்னராசு தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பிழைப்புநடத்திவந்துள்ளார்.

இந்நிலையில் சின்னராசுவின் விவசாய நிலத்தில் உள்ள மக்காசோள தட்டை தீப்பிடித்து எரிவதாக பழனி தீயணைப்பு துறையினருக்கு இன்று அதிகாலை தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதன்பின்னர்தான் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

தீயில் எறிந்த மக்காசோள வயலில் இறந்த நிலையில், நான்கு பேரின் உடல்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் பதறிப்போன தீயணைப்பு துறையினர் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயில் இறந்துகிடந்த உடல்களை சோதனை செய்தபோது, அது சின்னராசு, மனைவி வளர்மதி, மகள் சிவரஞ்சனி,மகன் கார்த்திகேயன் ஆகியோரது உடல் என்று தெரியவந்தது.

இவர்களின் மரணத்தில் சந்தேகமடைந்த போலீசார் இந்த வழக்கை சந்தேக மரண வழக்காக பதிவு செய்து, உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவில், இறந்த நான்கு பேருமே ஏற்கனவே விஷமருந்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சின்னராசு நேற்று வேலாயுதம்பாளையம் புதூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு தனது குடும்பத்துடன் சென்றுவிட்டு இரவு 9மணியளவில் வீட்டிற்கு வந்ததும் தெரியவந்தது.

வீட்டில் எந்த சண்டையும் இல்லை.. கடன் தொல்லை இல்லை.. அப்படி இருக்க இவர்கள் நான்கு பேரும் இறந்தது எதற்க்காக? கொலையா? தற்கொலையா? என போலீசார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பேரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.