திடீர் மாரடைப்பு.. 25 பயணிகளுக்கு கடவுளாக மாறிய ஓட்டுநர்.. கடைசி நொடியிலும் காப்பாற்றிய உயிர்கள்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பேருந்தில் இருந்த பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு மயங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் அருகே தெக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி (59). அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர், தனது குடும்பத்துடன் வேலூர் காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி பேபி அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
நேற்று காலை பேரணாம்பட்டில் இருந்து 25 பயணிகளுடன் குடியாத்தம் வழியாக சேலம் நோக்கி அரசு பேருந்தை வெங்கடசாமி ஓட்டிச் சென்றார். இறைவன்காடு பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் நடத்துநராக பணியில் இருந்தார்.
இதையும் படிங்க: குரூப் 1 தேர்வர்களே கவனம்! ஹால் டிக்கெட் வெளியீடு.. தேர்வு எப்போது? முக்கிய அறிவிப்பு!
பேருந்து குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றோரம் உள்ள புதிய பைபாஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது வெங்கடசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும், பேருந்தை வேகமாக இயக்காமல் கட்டுப்பாட்டுடன் மெதுவாக ஓட்டி சாலையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார்.
அதன் பின்னர் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து பயணிகள் மற்றும் நடத்துநர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி வெங்கடசாமி உயிரிழந்தார்.
பயணிகள் கூறுகையில், ஓட்டுநருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நேரத்தில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்திருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என்றும், ஆற்றுப் பாலம் அருகே சென்றதால் ஆபத்து மேலும் அதிகரித்திருக்கும் என்றும் தெரிவித்தனர். ஆனால் கடைசி நேரத்திலும் பேருந்தை கட்டுப்பாட்டுடன் நிறுத்தி தங்களை பாதுகாத்த வெங்கடசாமியின் செயலை நினைத்து கண்ணீர் மல்க தெரிவித்தனர்.