மாற்றுத்திறனாளி மகனை கொலை செய்து, பெற்றோர் தற்கொலை.. கடிதத்தில் கண்ணீர் கோரிக்கை..!
மாற்றுத்திறனாளி மகனை கொலை செய்து, பெற்றோர் தற்கொலை.. கடிதத்தில் கண்ணீர் கோரிக்கை..!
காது கேளாத, வாய் பேச இயலாத மகனை கொலை செய்த பெற்றோர், தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் ஆவடி அருகே நடந்துள்ளது.
சென்னையில் உள்ள ஆவடி, கோவில்பதாகை மசூதி தெருவில் வசித்து வந்தவர் முகமது சலீம் (வயது 44). இவரின் மனைவி சோபியா நஜீமா (வயது 37). இவர் கடந்த 20 வருடமாக அசோக் நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் அப்துல் சலீம் (வயது 14) என்ற மகன் இருக்கிறார்.
சிறுவன் பிறந்ததில் இருந்தே வாய் பேச இயலாமல், காது கேளாமல் இருந்துள்ளார். இதனால் பெற்றோர்கள் மகனின் எதிர்காலத்தை நினைத்து கவலையில் இருந்து வந்துள்ளனர். இன்று காலை நேரத்தில் முகமது சலீம், மாங்காட்டில் வசித்து வரும் தனது அக்கா சலீனாவுக்கு (வயது 48) செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அந்த குறுஞ்செய்தியில், "நீங்கள் இந்த செய்தியை படிக்கும் போது எங்களின் வாழ்க்கை முடிந்திருக்கும். இதனை உறவினர்களிடம் சொல்ல வேண்டாம். எங்களது புகைப்படத்தை காவல் துறையினர் மற்றும் பத்திரிகைக்கு தர வேண்டாம். எங்களின் இடம் மற்றும் பொருட்களை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். நகைகளை அக்கா பெண்ணிடம் கொடுத்துவிடுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சலீனாவின் குடும்பத்தினர், முகமது சலீமின் வீட்டிற்கு செல்கையில் அவர்கள் பிணமாக இருந்துள்ளனர். முகமது சலீமின் மகன் அப்துல் சலீம் தலை, முகம் போன்றவை பாலித்தீன் கவரால் சுற்றப்பட்டு பிணமாக இருந்துள்ளார். படுக்கையறையில் முகமது சலீம் மற்றும் சோபியா ஆகியோர் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பின்னர், இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களின் தற்கொலை குறிப்பாக கைப்பற்றப்பட்ட கடிதத்தில், "எங்களின் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. உறவினர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்" என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.