கள்ளக்காதலன் கூறிய ஒரே வார்த்தை கேட்டு.. 2 பிள்ளைகளுக்கும் பெத்த தாய் செய்த கொடூரம்! பகீர் சம்பவம்...!!!



alangayam-well-children-murder-mother-lover-arrested

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயத்தில் விவசாயக் கிணற்றில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட இரு சிறுவர்களின் அடையாளம் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பிரதாப் (5), பிரேம்குமார் (2) என்பது விசாரணையில் தெரியவந்தது. இரு சிறுவர்கள் கொலை செய்யப்பட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆலங்காயம் பெத்தூர் பகுதியில் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசத்துக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மிதப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆலங்காயம் போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் அங்கு சென்று சடலங்களை மீட்டனர். பின்னர் அவை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இதையும் படிங்க: 7 மணிக்கு மேல் வெளுத்து வாங்கப் போகும் மழை? வானிலை நிலவரம் இதோ!

ஆறு நாட்கள் விசாரணையில் தெரியவந்த அடையாளம்

சிறுவர்கள் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த ஆறு நாட்களாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார், உயிரிழந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர், வெளிச்சானூர் பகுதியைச் சேர்ந்த சேட்டு - சிவகாமி தம்பதியின் மகன்கள் என்பதை கண்டறிந்தனர்.

சிவகாமிக்கும் சேட்டுவுக்கும் இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக இருவரும் சுமார் ஓராண்டாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் செம்மரக் கடத்தல் வழக்கில் சேட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தனியாக வசித்து வந்த சிவகாமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

புதிய வாழ்க்கைக்காக குழந்தைகளை கொன்றதாக விசாரணையில் தகவல்

போலீஸ் விசாரணையின்படி, சிவகாமி மீண்டும் கர்ப்பமடைந்த நிலையில் ராஜாவுடன் சேர்ந்து வாழ முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்கனவே இருந்த இரண்டு குழந்தைகள் குறித்து ராஜா கேள்வி எழுப்பியதாகவும், அதன்பின்னர் இருவரும் சேர்ந்து சிறுவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

திட்டமிட்டபடி இரு குழந்தைகளையும் ஆலங்காயம் பகுதிக்கு அழைத்து வந்த சிவகாமி, ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த விவசாயக் கிணற்றில் அடுத்தடுத்து வீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் அங்கிருந்து இருவரும் சென்றதாக போலீசார் கூறுகின்றனர்.

இதையடுத்து குழந்தைகளின் தாய் சிவகாமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் ராஜா ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆலங்காயம் கிணறு கொலை தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: பெண்களிடம் அத்துமீறியதாக புகார்.. களத்தில் இறங்கிய ‘சிங்கப்பெண்’ போலீஸ்!