ஜெனரேட்டரில் உயர் மின் அழுத்தம்: திடீரென பற்றி எரிந்த செல்ஃபோன் டவரால் பரபரப்பு..!

ஜெனரேட்டரில் உயர் மின் அழுத்தம்: திடீரென பற்றி எரிந்த செல்ஃபோன் டவரால் பரபரப்பு..!



A cell phone tower caught fire suddenly at dindigul

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பகுதியில் உள்ள கனரா வங்கி அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த செல்போன் கோபுரத்துக்கு மின்சாரம் இல்லாத நேரத்தில் உதவியாக இருப்பதற்காக ஜெனரேட்டர் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நேற்று மாலை இந்த ஜெனரேட்டருக்கு அதிக மின்னழுத்தம் ஏற்பட்டதால் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. அதிகளவு மின் ஒயர்கள் உள்ளதால் தீ ஓயர்களில் பரவி சரசரவென சுமார் 15 அடி தூரத்துக்கு கரும் புகையோடு எரியத் தொடங்கியது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொது மக்கள் தங்கள் வீடுகளில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு வீட்டுக்கு வெளியே ஓடி வந்தனர். இதற்கிடையே இந்த கோபுரத்துக்கு அருகில் இருந்த மாடி வீட்டிற்கு செல்லும் தண்ணீர் குழாயில் தீ பட்டு குழாய் தீப்பற்றி எரிந்ததால் குழாய் உடைந்து அதிலிருந்து தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டதால், ஒரு பகுதியில் எரிந்த தீயினை அணைத்தது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் தீயுடன் போராடி தீயை அணைத்தனர்.