இழந்த செல்வத்தை மீண்டும் பெற.. புரட்டாசி சனிக்கிழமை விரதம்.. கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள்!



Purattasi Saturday fasting special

புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளின் நாமம் எங்கும் ஒலிக்கும் பக்தி மாதமாக கருதப்படுகிறது. பூலோக வைகுண்டமான திருமலையில் ஸ்ரீ வெங்கடாசலபதி கலியுகத்தில் அவதரித்தது புரட்டாசி மாதத்தில்தான் என்பது ஐதீகம். அதிலும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் குடும்பத்தில் அமைதி, நீண்ட ஆயுள் மற்றும் ஐஸ்வர்யம் பெருகுவதற்கான சிறப்பு வழிபாடாக பக்தர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசி புதனின் வீடாகவும், புதன் பெருமாளின் அம்சமாகவும் கருதப்படுவதால் இம்மாதம் பெருமாளுக்கு உகந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் புதனுக்கு நட்பு கிரகமாக சனி பகவான் கருதப்படுவதால், புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளையும் சனி பகவானையும் வழிபடும் வழக்கம் ஏற்பட்டதாக ஆன்மிக மரபுகள் கூறுகின்றன.

புரட்டாசி சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, சனி பகவானுக்கு நல்லெண்ணெயில் எள் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு என நம்பப்படுகிறது. பின்னர் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும், இயன்றவர்கள் திருப்பதி சென்று காணிக்கை செலுத்துவதும் வழக்கமாக உள்ளது. அன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டாலும் சனி தோஷத்தின் பாதிப்புகள் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதையும் படிங்க: புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? ஆன்மீக ரீதியாக சொல்லப்படும் முக்கிய காரணங்கள் என்ன?

Saturday fasting

புரட்டாசி சனிக்கிழமைகளில் தர்மம் செய்வது சிறப்பு என கூறப்படுகிறது. காகத்திற்கு எள்ளும் வெல்லமும் கலந்த அன்னத்தை இலை மீது வைத்து வழிபடுவதும் சனி பகவானின் அருளைப் பெறும் வழக்கங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் சனி, புதன் திசை நடப்பவர்கள் இந்த நாளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி சுபபலன்கள் கிடைக்கும் என்றும் ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.

சனி பகவான் திருமலைக்கு சென்றபோது, அங்கு பெருமாளின் பக்தர்களைத் துன்புறுத்தக் கூடாது என மகாவிஷ்ணு அறிவுறுத்தியதாக புராணக் கதை ஒன்று கூறுகிறது. அதன்பின் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கு சனி பகவானின் அருள் கிடைக்கும் என வரம் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெருமாள் வழிபாட்டுடன் சனி பகவானுக்கான வழிபாடும் இந்த நாளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வருடம் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருக்க முடியாதவர்கள், குறைந்தபட்சம் புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலாவது விரதமிருந்து பெருமாளை வழிபடலாம் என்பது ஆன்மிக மரபு. பாண்டவர்கள் வனவாசத்தின் போது புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிபட்டதன் பலனாக இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்றதாகவும் புராணக் கதைகள் கூறுகின்றன. எனவே, பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமையை சிறப்புடன் கடைப்பிடித்து பெருமாளின் அருளை வேண்டுகின்றனர்.

இதையும் படிங்க: புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? ஆன்மீக ரீதியாக சொல்லப்படும் முக்கிய காரணங்கள் என்ன?