தீபாவளிக்கு ‘மூக்குத்தி அம்மன் 2’ ரிலீஸ்?… நயன்தாரா ரசிகர்களுக்கு வந்த முக்கிய தகவல்!
திடீர் ட்விஸ்ட்.... களம் இறங்க அதிரடி காட்டும் உதயநிதி! மதுராந்தகம், தாராபுரத்தில் மும்முனைப் போட்டி உறுதி.... நாளை வெளியாகும் அதிரடி அறிவிப்பு!!!
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக மற்றும் தவெக தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், திமுகவின் நிலைப்பாடு இன்னும் தெளிவாகவில்லை. வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள சூழலில், அறிவாலயத்தின் அடுத்த நகர்வு தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
அதிமுக, தவெக களம் இறங்குவது உறுதி
சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிமுகவும் தவெகவும் களத்தில் இறங்குவது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தலில் விலகி நிற்போம் என சொல்லும் ஸ்டாலின்! முடியவே முடியாது என மறுத்த உதயநிதி..... அறிவாலயத்தில் தொடரும் அதிரடி ஆலோசனை...!!!
இதற்கிடையில், திமுக தலைமையிலான கூட்டணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கட்சியின் தேர்தல் வியூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தனித்து போட்டியிடும் சூழலில், மும்முனைப் போட்டி உருவானால் அது தங்களுக்கு சாதகமாக இருக்காது என்ற கணக்கும் திமுக வட்டாரத்தில் நிலவுகிறது.
திமுக புறக்கணிக்குமா? எழும் புதிய வியூகம்
தவெக அமைப்பு ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அந்த கட்சியை நேரடியாக எதிர்கொள்வதைவிட அதிமுகவுக்கு வழிவிட்டு ஒதுங்குவது குறித்தும் திமுக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் விஜய்யின் அரசியல் எழுச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்பது ஒரு தரப்பின் கணக்காக கூறப்படுகிறது.
ஆனால், தேர்தலை புறக்கணிப்பது குறித்து கட்சிக்குள் மாறுபட்ட கருத்துகளும் உள்ளன. குறிப்பாக, உதயநிதி ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. திமுக தேர்தலில் இருந்து விலகினால், விஜய்யின் எழுச்சிக்கு அஞ்சி கட்சி பின்வாங்கிவிட்டதாக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளதாக அவர் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை அவசர ஆலோசனை;
திமுக போட்டியிட முடிவு செய்தால், மதுராந்தகம் தொகுதியில் சமீபத்தில் கட்சியில் இணைந்த பனையூர் பாபுவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சும் அறிவாலய வட்டாரத்தில் உள்ளது.
இந்த மாறுபட்ட கருத்துகளுக்கு இடையே, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் திமுக தலைமை நாளை அவசர ஆலோசனை நடத்த உள்ளது. இதில் இரு தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவதா அல்லது இடைத்தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுப்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவாலயத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதே தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் திமுகவுக்கு செக் வைக்கும் எடப்பாடி! தலைகீழாக மாறப்போகும் தமிழக அரசியல் களம்....!!!