வெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது.! 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா.!
வெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது.! 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா.!
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 3வது முறையாக மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். மேற்கு வங்காளத்தில் 294 சட்டமன்ற உறுப்பினர் கொண்ட மேற்கு வங்கத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.
இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களிலும், பாஜக 77 இடங்களிலும் மட்டும் வெற்றி பெற்றது. இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு ஜகந்நாத் சர்க்கார் மற்றும் நிசித் பிரமானிக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே மக்களைவை உறுப்பினர்களாக உள்ள நிலையில் சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற்று இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில், அவர்கள் இருவரும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். எம்எல்ஏ அல்லது எம்பி ஆகியவற்றில் ஏதோ ஒரு பகுதியை மட்டுமே தக்கவைக்க முடியும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
மேற்குவங்காள சட்டப்பேரவை சபாநாயகர் பிமன் பானர்ஜியிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை அவர்கள் கொடுத்தனர். இதுகுறித்து ஜகந்நாத் சர்க்கார் மற்றும் நிசித் பிரமானிக் கூறுகையில், தாங்கள் கட்சி முடிவை பின்பற்றுகிறோம். எங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை கட்சி ராஜினாமா செய்ய முடிவு செய்தது. ஆகையால், ராஜினாமா செய்தோம் என தெரிவித்துள்ளனர்.