‘0’ வாக்குகள்.. NOTA-வுக்குக் கூட 1 ஓட்டு! ராஜஸ்தான் தேர்தலில் வேட்பாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி!



Rajasthan candidate not get vote

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வேட்பாளர் ஒருவருக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் பாலோத்ரா மாவட்டம் சிந்த்ரி நகராட்சியின் 3-வது வார்டில் ராஷ்ட்ரிய லோக்தாந்திரிக் பார்ட்டி (RLP) சார்பில் போட்டியிட்ட ஓம் பிரகாஷ் என்பவருக்கு தேர்தல் முடிவில் ‘0’ வாக்குகள் பதிவாகியுள்ளன. அதே வார்டில் NOTA-வுக்கு ஒரு வாக்கு பதிவாகியுள்ளது.

இந்த வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் பன்வரா ராம் 133 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் கேமா ராம் 93 வாக்குகள் பெற்றார். ஆனால் RLP வேட்பாளர் ஓம் பிரகாஷின் வாக்கு எண்ணிக்கை மட்டும் பூஜ்ஜியமாக இருந்தது. இதனால் இந்த முடிவு சமூக வலைதளங்களிலும், உள்ளூர் அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஜெய்ப்பூரில் அதிர்ச்சி சம்பவம்.. மனைவி, 3 மகள்கள் கொலை.. தந்தை தலைமறைவு!

rajasthan

இதனிடையே, ஓம் பிரகாஷ் தேர்தல் முடிவு குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார். தனது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் தனக்கு வாக்களித்ததாக கூறிய அவர், வாக்குப்பதிவு அல்லது வாக்கு எண்ணிக்கை நடைமுறையில் முறைகேடு நடந்திருக்கலாம் என குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், கிடைத்த தகவல்களின்படி ஓம் பிரகாஷ் 3-வது வார்டின் வாக்காளர் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் தனக்கே வாக்களிக்க முடியாத நிலை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், தனது குடும்பத்தினர் உள்ளிட்டோர் தனக்கு வாக்களித்ததாக அவர் கூறியிருப்பதால், வாக்குப்பதிவு மற்றும் எண்ணிக்கை தொடர்பான தனது சந்தேகங்களை அவர் முன்வைத்துள்ளார். இதனால் ‘0’ வாக்குகள் பெற்ற விவகாரம் ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் பேசுபொருளாகியுள்ளது.

இதையும் படிங்க: குழந்தையின் அழுகையை கேட்டு ஓடி வந்த நாத்தனார்.. காத்திருந்த அதிர்ச்சி.. சமையலறையில் மருத்துவர் மர்ம மரணம்!