இறந்த பெண்ணின் கருவரை மூலம் பிறந்த முதல் குழந்தை! பிரேசில் மருத்துவர்கள் சாதனை
இறந்த பெண்ணின் கருவரை மூலம் பிறந்த முதல் குழந்தை! பிரேசில் மருத்துவர்கள் சாதனை
பிரேசிலில் 45 வயது பெண்ணின் கருவரை 32 வயது பெண்ணிற்கு மாற்றப்பட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுவரை உலகளவில் 11 முறை முயற்சிக்கப்பட்டு இப்போது தான் முதல் முறையாக குழந்தை உயிருடன் பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி குழந்தை பாக்கியம் இல்லாத பலருக்கு ஒரு நம்பிக்கை அளித்துள்ளது.
பிரேசிலில் உள்ள சாவோ பௌலா பல்கழைக்கழக மருத்துவர்கள் தான் இத்தகைய சாதனையை புரிந்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு 45 வயது பெண் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் இறப்பதற்கு முன்பு தன் உடல் உறுப்பகளை தானம் செய்துள்ளார். அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகம் என அனைத்து உறுப்புகளும் வெவ்வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.
அவரின் கருப்பை மட்டும், பிறக்கும் போதே கருப்பை இல்லாமல் பிறந்த மற்றொரு 32 வயதான பெண்ணிற்கு 11 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. பின்பு இரண்டு நாட்கள் அந்த பெண் ICUவில் தீவிரமாக கண்கானிக்கப்பட்டுள்ளார். பின்னர் சில நாட்களில் சகஜ நிலைக்கு திரும்பிய பெண்ணிற்கு 37 நாட்களுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் அனைத்து பெண்களுக்கும் வருவது போல் மாதவிடாய் வந்துள்ளது.
அதனை தொடர்ந்து 7 மாதங்களுக்கு பிறகு செயற்கை கருவூட்டல் முறையில் அவருக்கு கரு உருவாகியுள்ளது. அதன் பின் 35 வாரம் 3 நாட்களில் அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்தனர். இறந்த பெண்ணின் கருவரை மாற்று சிகிச்சை மூலம் முதல் முறையாக உயிருடன் ஒரு குழந்தையை பிறக்க வைத்த பிரேசில் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதைப் போன்ற முயற்சி முதல் முதலில் 2000 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடந்தது. ஆனால் 2012 ஆம் ஆண்டு வரை இந்த முயற்சி பயனளிக்கவில்லை. உயிருடன் இருக்கும் பெண்ணின் கருவரையை மாற்றி சுவீடனில் முதல் முறையாக குழந்தை பிறந்துள்ளது.
இந்தியாவில் 2017ஆம் ஆண்டு இதே போன்று கருவரை மாற்று சிகிச்சை செய்துகொண்ட பெண் ஒருவர் கருத்தாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.