இரவு 11 மணிக்கு ஒரு பெண் பிள்ளை ஆர்டர் பண்ற பொருளா இது.... கண்டப்படி கேள்வி கேட்ட டெலிவரி ஊழியர்! கொந்தளித்த இளம்பெண்...!!!
டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் உணவு டெலிவரி ஊழியருடன் ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் ஆர்டர் பெற்றுக்கொள்ள வெளியே வந்தபோது, டெலிவரி ஊழியர் பேசிய விதம் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆர்டரை பார்த்து தனிப்பட்ட கருத்து
டெல்லியைச் சேர்ந்த அன்யா விக், தனது அனுபவத்தை லிங்க்ட்இன் தளத்தில் பதிவிட்டுள்ளார். தகவலின்படி, இரவு 11 மணியளவில் ஸொமாட்டோ செயலி மூலம் அவர் 'பான்' ஆர்டர் செய்திருந்தார். ஆர்டரை பெற தனியாக வெளியே வந்தபோது, டெலிவரி ஊழியர் அவரிடம் தேவையில்லாத சில கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.
அன்யா எந்த பதிலும் அளிக்காமல் இருந்தபோதும், அந்த ஊழியர் தொடர்ந்து பேசியதுடன், அவரது ஆர்டரை விமர்சிக்கும் வகையிலும் கருத்து தெரிவித்ததாக அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த அன்யா, வாடிக்கையாளர்கள் என்ன ஆர்டர் செய்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு கருத்து கூற டெலிவரி ஊழியர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
புகார் அளிக்க தயக்கம் ஏன்?
இந்த விவகாரத்தில் அன்யா முன்வைத்துள்ள மற்றொரு கவலை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. டெலிவரி ஊழியர் மீது புகார் அளித்தால் அவரது வேலை பாதிக்கப்படலாம் என்றாலும், அதற்குப் பிறகு தன்னுடைய முகவரி அவருக்குத் தெரிந்திருப்பதால் ஏதேனும் பாதுகாப்பு சிக்கல் உருவாகுமோ என்ற அச்சத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சார்ந்த சவால்களை இந்த கருத்து மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக சமூக வலைதள பயனர்கள் கூறி வருகின்றனர்.
பெண்களின் அனுபவங்கள் குவியும் பதிவு
அன்யாவின் பதிவுக்கு பதிலளித்த ஸொமாட்டோ நிறுவனம், சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஆர்டர் ஐடியை பகிருமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதையடுத்து, அந்த பதிவின் கீழ் நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டதாக பகிர்ந்து வருகின்றனர்.
உணவு அல்லது பொருட்களை வாங்கும்போது வீட்டில் வேறு யாரோ இருப்பது போல நடந்து கொள்வதாக சிலர் தெரிவித்துள்ளனர். மேலும், வாடிக்கையாளர்களிடம் எவ்வாறு கண்ணியமாகவும் தொழில்முறையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து டெலிவரி பணியாளர்களுக்கு நிறுவனங்கள் முறையான பயிற்சி வழங்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: படிக்கவச்சவனுக்கே துரோகமா? வேலை கிடைத்ததும் ஓடிப்போன மனைவிக்கு கணவன் கொடுத்த பதிலடி.... பழிக்கு பழிவாங்கின சம்பவம்...!!!