குவியும் பிணங்கள்..! இரண்டரை நிமிடங்களுக்கு ஒருவர் பலி..! நியூயார்க் நகரை புரட்டிப்போடும் கொரோனா.!
கொரோனாவின் கோர பிடியில் சிக்கி தவிக்கிறது வல்லரசு நாடான அமெரிக்கா. பல சாதனைகளில் உலகிற்கே முன் உதாரணமாக விளங்கிவரும் அமெரிக்கா தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மிக மோசமான சாதனைகளை சந்தித்துவருகிறது.
கொரோனோவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 277,533 என்ற எண்ணிக்கையுடன் முதல் இடத்தில் உள்ளது அமெரிக்கா. மேலும், அந்நாட்டில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 7,403 ஆக உள்ளது. அமெரிக்காவின் முக்கிய பகுதிகளில் ஒன்றான நியூயார்க் நகரம் படு மோசமான இழப்புகளை சந்தித்துவருகிறது.

இந்த நகரில் மட்டும் ஒரே நாளில் இரண்டரை நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் 562 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக நியூஜெர்சி, மிக்சிகன், மாசாசூசெட்ஸ், லூசியானா, ஃபுளோரிடா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.