என்ன ஒரு கேடித்தனம்...! அமெரிக்க அரசை ஏமாற்றி ரூ.800 கோடி அபேஸ்...! இந்திய வம்சாவளி நபரின் பகீர் மோசடி!!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ரிச்சர்ட்சனில் செயல்பட்ட ஆய்வகத்தின் மூலம் சுமார் 93 மில்லியன் டாலர் மதிப்பிலான போலி Medicare மருத்துவக் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காதீர் கான் முகமது மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மரபணுப் பரிசோதனைகள் தொடர்பான இந்த மோசடி வழக்கில், அமெரிக்க அதிகாரிகள் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர். அவர் இந்தியாவின் ஹைதராபாத்தில் இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மருத்துவர்களின் அடையாளங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
ரிச்சர்ட்சனில் உள்ள American Premier Labs நிறுவனத்தை நடத்தி வந்த காதீர் கான் முகமது, நோயாளிகளுக்கு முறையாகக் கோரப்படாத அல்லது மேற்கொள்ளப்படாத மரபணுப் பரிசோதனைகளுக்காக Medicare-க்கு போலி மருத்துவக் கோரிக்கைகளை அனுப்பியதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட நோயாளிகளுடன் மருத்துவத் தொடர்பே இல்லாத மருத்துவர்களின் தனிப்பட்ட அடையாளத் தகவல்கள், அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
93 மில்லியன் டாலர் போலி கோரிக்கைகள்
2023-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2024-ம் ஆண்டு அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் சுமார் 93 மில்லியன் டாலர் மதிப்பிலான Medicare மோசடி கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதில் குறைந்தது 65 மில்லியன் டாலர் பணம் செலுத்தப்பட்டதாகவும், 2023-ல் ஒரே 10 நாட்களில் சுமார் 13 மில்லியன் டாலர் வழங்கப்பட்டதாகவும் அமெரிக்க சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் காதீர் கான் முகமதுவின் கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கூறப்படும் வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் 6 மில்லியன் டாலர் தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். FBI-யின் டல்லாஸ் அலுவலகமும் அமெரிக்க சுகாதாரத் துறையின் OIG அமைப்பும் இணைந்து விசாரணை மேற்கொண்டுள்ளன.
ஹைதராபாத்தில் பதுங்கியிருக்கிறாரா?
வழக்கு விசாரணையை எதிர்கொள்ளாமல் அமெரிக்காவிலிருந்து தப்பியதாகக் கூறப்படும் காதீர் கான் முகமது தற்போது ஹைதராபாத் நகரில் இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது இருப்பிடத்தை கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.