ரஷ்ய வீரர்களே போரை நிறுத்துங்கள் - நடிகர் அர்னால்டு கோரிக்கை..!
ரஷ்ய வீரர்களே போரை நிறுத்துங்கள் - நடிகர் அர்னால்டு கோரிக்கை..!
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா படையெடுத்துச் சென்றுள்ள நிலையில், அந்நாடு பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதனால் ரஷ்ய படை வீரர்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில், உக்ரைன் மீது பல்முனைத் தாக்குதல் நடைபெற்று வருவதால் அங்குள்ள அப்பாவி மக்களும் பலியாகி வருகின்றனர்.
ரஷியாவின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து பொருளாதார தடை விதித்துள்ளன. இருப்பினும், தனது முடிவில் இருந்து பின்வாங்காமல் இருக்கிறது. போரை நிறுத்தச் சொல்லி பல்வேறு உலக நாடுகள் வலியுறுத்தியும், சர்வதேச நீதிமன்றம் ஆணையிட்டும் எந்த பலனும் இல்லை. இந்த நிலையில், ஹாலிவுட்டில் மிகப் பிரபலமாக இருக்கும் நடிகர் அர்னால்டு, ரஷ்ய வீரர்களுக்கு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "ரஷ்ய வீரர்கள் உக்ரைன் மீது படையெடுத்துச் சென்றுள்ளீர்கள். இது உங்களின் பெரியப்பா மற்றும் தாத்தா காலத்தில் இருந்த போர் போன்று கிடையாது.
உலக நாடுகள் ரஷ்யாவின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. அவை அனைத்தையும் நாம் உணர வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பல மகப்பேறு மருத்துவமனைகள் தாக்கப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகளும் பெண்களும் உயிரிழந்துள்ளனர். நான் பேசுவதை கேட்கும் ஒவ்வொரு ரஷ்ய வீரருக்கும் நான் பேசுவதன் அர்த்தம் புரியும். உங்கள் கண்களால் போரின் தாக்கத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.