இன்ஸ்டாகிராம் பிரபலங்களே உஷார்.. ஒரேயொரு வீடியோ.. லட்சத்தில் அபராதம்.!
இன்ஸ்டாகிராம் பிரபலத்துக்கு அபராதம் விதிக்கப்பட்ட விஷயம் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
சாப்பிட்ட உணவை வழங்கி பெருமிதம்:
மலேசியாவைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் டேங் சீ லுக், சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ காரணமாக கடுமையான சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார். கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி டேங் சீ லுக் வெளியிட்ட வீடியோவில், மூன்று சிறுவர்கள் கே.எஃப்.சி உணவகத்தில் கோழி இறைச்சியை சாப்பிட்டு, பின் மீதமிருந்த எலும்புத் துண்டுகளை சாதத்துடன் கலந்து, ஒரு ஆதரவற்ற முதியவருக்கு வழங்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
அரசுத்தரப்பு கிடுக்குபிடி:
அவர்கள் அந்த வீடியோவில், "இன்று நாம் ஒரு நற்செயல் செய்யப் போகிறோம்" என்று பேசியபடி முதியவருக்கு உணவு வழங்கி இருந்தனர். இந்த வீடியோ நெட்டிசன்களிடையே கடுமையான கண்டனத்தை பெற்றது. மேலும், இன்ஸ்டா பிரபலத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், "இது தர்மம் இல்லை. பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க, பொழுதுபோக்கிற்காக ஒரு மனிதனின் வறுமையை சுரண்டிய திட்டமிட்ட செயல்” என வாதிட்டார்.

லட்சக்கணக்கில் அபராதம்:
மேலும், பாதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவரும், நடந்த சம்பவத்தால் தான் மனவேதனை மற்றும் கோபம் அடைந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனையடுத்து, விசாரணை முடிவில் தனது செயலுக்கு மன்னிப்பு கோரிய டேங் சீ லுக், குறைந்தபட்ச அபராதம் விதிக்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார். இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்ற வகையில், கடுமையான தண்டனை அவசியம் என நீதிமன்றம் தனது அதிரடி கருத்தை பதிவு செய்தது. இதனால் இன்ஸ்டா பிரபலத்துக்கு இந்திய மதிப்பில் ரூ.9.2 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
மன்னிப்பு கேட்டார்:
தீர்ப்பு வெளியானதும் அபராதத் தொகையை செலுத்திய இன்ஸ்டாகிராம் பிரபலம், சம்பந்தப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கினார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்த சம்பவத்திற்காக வருந்துவதாகவும், இனி என்னை மாற்றிக்கொண்ட பின்னரே மக்கள் முன் தோன்றுவேன்" எனவும் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டா பிரபலம் என்ற பெயரில் தனிநபரிடம் எந்த விதமான அனுமதியும் வாங்காமல் வீடியோ எடுத்து பதிவிடும் பல நபர்களுக்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை பாடமாகவும் அமைந்துள்ளது.