காதலின் அவஸ்தை போஸ்டர்.. நா.த.க நிர்வாகி தலைமறைவு - காவல்துறை வலைவீச்சு..!

காதலின் அவஸ்தை போஸ்டர்.. நா.த.க நிர்வாகி தலைமறைவு - காவல்துறை வலைவீச்சு..!



Tirunelveli Kalakkad NTK Worker Love Failure Poster Issue Police Register FIR

காதலி பெற்றோர் பேச்சை கேட்டு செயல்பட்ட ஆத்திரத்தில், போஸ்டர் அடித்து ஒட்டி தொந்தரவு செய்த காதலன், பெண்ணின் தந்தையை தாக்கிய புகாரில் காவலர்களால் தேடப்பட்டு வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு, மஞ்சுவிளை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரின் மகன் விஜயரூபன். இவர் களக்காடு நகரில் காதல் பறவைகள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், களக்காடு நகராட்சி 2 ஆவது வார்டில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளராக களமிறங்கி 18 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 

விஜயரூபனிற்கும் - களக்காடு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானானது நாளடைவில் காதலாக மாறவே, இருவரும் கடந்த 4 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதனால் பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெண்ணும் பெற்றோர் சொல்லை கேட்டு காதலை கைவிட்டு இருக்கிறார். மேலும், விஜயரூபனை சந்திக்காமல் தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயரூபன், காதலியை பழிவாங்க திட்டமிட்டு இருக்கிறார். 

tirunelveli

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பெண்ணிற்கும் - வேறு நபருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், விஜயரூபன் காதலித்த போது பெண்ணுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து, காதலி தனக்கு எழுதிய கடிதத்துடன் போஸ்டர் அடித்து களக்காடு பகுதிகள் முழுவதும் ஒட்டியுள்ளார். பெண்ணுக்கு திருமணம் செய்யப்பட்ட மாப்பிள்ளையின் ஊரிலும் போஸ்டரை ஒட்ட, சம்பவம் காவல் துறையினர் வரை சென்றுவிட்டது. இந்த விஷயம் ஊடகங்களில் செய்தியாக வெளியாகி வைரலாகவே, களக்காடு காவல் நிலாயத்தில் பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரில், "பள்ளிக்காலத்தில் இருந்தே எனது மகளும் - விஜயரூபனும் ஒன்றாக படித்து வந்தார்கள். எனது மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என விஜயரூபன் பெண் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். நான் பெண் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால், என்னை தாக்கி அரிவாளால் வெட்டி கொலை செய்திடுவதாக மிரட்டல் விடுகிறார்" என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக்கொண்டுள்ள காவல் துறையினர், விஜயரூபனின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவான விஜயரூபனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.