கிராமத்தில் இரவில் காணாமல் போன நாய்களும், ஆடுகளும்! உண்மை தெரிந்ததால் பீதியில் பொதுமக்கள்!
கிராமத்தில் இரவில் காணாமல் போன நாய்களும், ஆடுகளும்! உண்மை தெரிந்ததால் பீதியில் பொதுமக்கள்!
திருநெல்வேலி விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள வேம்பையாபுரம் கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர். அப்பகுதியில் விலங்குகள் சரணாலயம் அமைக்கப்பட்டு யானை, சிறுத்தை, புலி, கரடி, மிளா, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் வன விலங்குகள் அடிக்கடி மலையில் இருந்து இறங்கி கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது. அந்த விலங்குகள் வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு மற்றும் நாய்களை அடித்துக் கொன்ற சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் வள்ளியம்மாள் என்ற முதியவர் அவரது வீட்டில் 4 ஆடுகள் வளர்த்து வந்தார். இந்தநிலையில் அவரது ஆடுகளை வீட்டின் அருகே கட்டி போட்டிருந்தார். இதனையடுத்து காலை வழக்கம்போல் வள்ளியம்மாள் தொழுவத்திற்கு ஆடுகளை அவிழ்ப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் அங்கு 4 ஆடுகளும் இறந்து கிடந்தன.
இறந்து கிடந்த ஆடுகளின் அருகே சிறுத்தை வந்து சென்றதற்கான கால்தடங்களும் இருந்தன. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த அதிகாரிகளிடம் எனது கணவர் இறந்து விட்டதால், இந்த ஆடுகளை வைத்துதான் பிழைத்து வந்தேன். ஆனால் அதையும் பறி கொடுத்து விட்டேன். இதனால் எனக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும் என்று வள்ளியம்மாள் கூறியுள்ளார். அதேபோல் அப்பகுதியில் உள்ள நாய்களை சிறுத்தை வேட்டையாடியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.