தாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை.. தந்தையை கார் ஏற்றிக்கொன்ற 16 வயது சிறுவன்.. தேனியில் பகீர் சம்பவம்.!
தாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை.. தந்தையை கார் ஏற்றிக்கொன்ற 16 வயது சிறுவன்.. தேனியில் பகீர் சம்பவம்.!
தினமும் தாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்து வந்த தகப்பனை 16 வயது மகன் நண்பருடன் சேர்ந்து கார் ஏற்றி கொன்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள பொம்மையகவுண்டன்பட்டி, பள்ளி ஓடைத் தெருவில் வசித்து வருபவர் ஆசையன் (வயது 43). இவர் விவசாயியாக இருந்து வருகிறார். கடந்த வாரம் ஆசையன் தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக தேனி அல்லிநகரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது, ஆசையனின் மீது கார் வேண்டும் என்றே மோதி விபத்தை ஏற்படுத்தி சென்றது தெரியவந்தது.
இதனால் அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்த காவல் துறையினர், பொம்மையகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த காரின் உரிமையாளர் சிவநேசன் (வயது 28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கொலைக்கு மூளையாக செயல்பட்டது, ஆசையனின் 16 வயது மகன் என்ற பகீர் தகவல் அம்பலமானது.
இதனையடுத்து, ஆசையனின் மகனான 16 வயது சிறுவனிடம் நடந்த விசாரணையில், "எனது அம்மாவுக்கும் - அப்பாவுக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை நடக்கும். எனது தாயின் நடத்தையில் சந்தேகித்து தந்தை அம்மாவை சித்ரவதை செய்து வந்தார். இதனை நான் தட்டிக்கேட்டால், அவர் என்னையும் அடித்தார். இதனால் தாயை கொடுமை செய்யும் தந்தையை கொலை செய்ய நான் திட்டமிட்டேன்.
சிவநேசன் எனது நெருங்கிய நண்பர் என்பதால், அவரிடம் விஷயத்தை தெரிவித்தேன். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, தந்தை விவசாய நிலத்திற்கு சென்றபோது கார் ஏற்றி அவரை கொலை செய்து தப்பி சென்றோம். காவல் துறையினரின் விசாரணையில் சிக்கிக்கொண்டோம்" என்று தெரிவித்துள்ளான். இதனையடுத்து, இருவரையும் கைது செய்த காவல் துறையினர், ஆசையனின் மகனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். சிவநேசன் தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.