புத்தகத்தை வீசி தாக்கிய தலைமை ஆசிரியர்; கல்வித்துறை அதிகாரி புகார்.. வைரலான வீடியோ..!

புத்தகத்தை வீசி தாக்கிய தலைமை ஆசிரியர்; கல்வித்துறை அதிகாரி புகார்.. வைரலான வீடியோ..!


The headmaster who threw the book and attacked him.

கல்வித்துறை அதிகாரி மீது தலைமையாசிரியர் ஒருவர் புத்தகத்தை வீசி தாக்கியுள்ளார் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேப்புலியூரில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சேகர் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தலைமை ஆசிரியர் சேகருக்கு கடந்த மாதம் வழங்கப்பட்ட சம்பளத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளனர். இது பற்றி கேட்பதற்காக திருநாவலூர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு, தலைமை ஆசிரியர் சேகர் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த வட்டார கல்வி அதிகாரி முரளி கிருஷ்ணனிடம் பிடித்தம் செய்த சம்பளத்தை வழங்குமாறு வாக்குவாதம் செய்துள்ளார். 

அப்போது அவர் தகாத வார்த்தைகளால் முரளி கிருஷ்ணனை திட்டி, அவரது மேஜை மேல் இருந்த புத்தகத்தை எடுத்து அவர் மீது வீசி தாக்கினார். அந்த புத்தகம் அந்த அதிகாரியின் தலையின் மீது உரசியபடி சென்று கீழே விழுந்தது. இதனால்  அந்த அலுவலகத்தில் பதட்டம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சேகரை அலுவலகத்தை விட்டு வெளியே அழைத்து சென்றனர். 

இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக திருநாவலூர் காவல்துறையில் முரளி கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர், விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.