15 வருட பழக்கத்திற்கு பட்டை நாமம்.. 4 கோடி பெப்பே.. ஏலச்சீட்டு நடத்திய பெண் குடும்பத்துடன் தலைமறைவு..!

15 வருட பழக்கத்திற்கு பட்டை நாமம்.. 4 கோடி பெப்பே.. ஏலச்சீட்டு நடத்திய பெண் குடும்பத்துடன் தலைமறைவு..!


Redhills Near Village woman Cheated Money Rs 4 Crore

சென்னையை அடுத்துள்ள செங்குன்றம் ஆட்டம் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இன்று ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை செய்கையில், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ண செல்வி என்ற 45 வயது பெண்மணி, கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்‌.

அவரது ஏலச்சீட்டு நடைமுறைக்கு குடும்பத்தினரும் உறுதுணையாக இருந்த நிலையில், கடந்த காலங்களில் ஏலச் சீட்டு நடத்தும் தொகை மற்றும் பரிசு பொருட்கள் போன்றவற்றை மக்களுக்கு சரியான சமயத்தில் வழங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வருடம் முதலாகவே ஏலச்சீட்டு நடத்தி வந்த செல்வி, பணம் போட்ட மக்களுக்கு பணத்தை தராமலும், பரிசுப் பொருட்களை தராமலும் இழுத்தடித்து வந்துள்ளார். மேலும், பல்வேறு நபர்களிடம் ரூபாய் 50,000 முதல் ரூ. 3 லட்சம் வரை கடன் வாங்கியதாக தெரியவருகிறது.

இதனை அடுத்து ஏலச்சீட்டு போட்டவர்கள் பணம் கேட்கவே, அவர்களுக்கு குடும்பத்துடன் கொலை செய்திடுவதாக மிரட்டல் விடுத்தார். கடந்த இரண்டு நாட்களாக அவரையும், அவரின் குடும்பத்தையும் காணவில்லை. அவர் தனது குடும்பத்துடன் ரூ. 4 கோடி பணத்துடன் தலைமறைவாகிவிட்டார். 

மொத்தமாக 100க்கும் மேற்பட்ட மக்களிடம் ஏலச்சீட்டு, கடன் என்று வாங்கி ஏமாற்றி இருக்கிறார். அவரின் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.