சென்னையில் புறநகர் ரயில்களில் தனியார் ஊழியர்களும் செல்ல அனுமதி.! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு.!

சென்னையில் புறநகர் ரயில்களில் தனியார் ஊழியர்களும் செல்ல அனுமதி.! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு.!


private staff allowed in train

நாடு முழுவதும் பரவிய வைரஸ் தொற்றால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மாநிலங்களுக்கு இடையே அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனாலும் புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது.

இந்தநிலையில், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் புறநகர் மின்சார ரயிலில் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்களும் புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். 

train

இந்த நிலையில், அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் தனியாா் நிறுவன ஊழியா்களும் மின்சார ரயிலில் பயணம் மேற்கொள்ள ரயில்வே நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே முதன்மை மேலாளா்  கூறுகையில், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் சுகாதாரம் மற்றும் துப்புரவுப் பணிகளில் ஈடுபடும் பணியாளா்கள், அரசு மற்றும் தனியாா் துறைகளில் அத்தியாவசியப் பொருள்களை கையாளும் பணி மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள பணியாளா்களும் மின்சார ரயிலில் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அனைத்துக் கல்வி நிலையங்களில் பணிபுரியும் ஊழியா்கள், குழந்தை நலம், மூத்த குடிமக்கள் நலம், சுகாதாரம் மற்றும் சமூக சேவை செய்யும் அமைப்புகள், அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகத்தில் பணிபுரியும் ஊழியர்கள். பார் கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் வக்கீல்கள் ஆகியோர் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாவசியப் பணி மற்றும் சேவைகளில் ஈடுபடும் ஊழியா்கள் தங்கள் அலுவலகத்திலிருந்து எழுத்துப்பூா்வ அங்கீகாரக் கடிதத்தையும், தங்கள் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையும் சமா்ப்பித்தால், பயணம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.