264 சவரன் நகைகள் கொள்ளை.. பயணத்தின் போது பகீர் சம்பவம்.. கொள்ளையர்களுக்கு அதிகாரிகள் வலைவீச்சு..!
டெம்போ ட்ராவலரில் கொண்டு செல்லப்பட்ட சூட்கேசில் இருந்த 264 பவுன் தங்கநகையும் காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் அதனை வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் அகத்தியர் தெருவில் வசித்து வருபவர் பெரியசாமி. இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 10 பேருடன் டெம்போ ட்ராவலர் ஒன்றில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் அருகாமையில் தனது சொந்த ஊரான புதூர் நாகலாபுரத்திற்கு நேற்றிரவு சென்றிருக்கிறார்.
அப்போது தங்களது உடமைகள் அனைத்தையும் வேனின் மேற்பகுதியிலுள்ள சூட்கேஸ்களில் வைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள ஒரு தேனீர் கடையில் இன்று அதிகாலை இறங்கி தேனீர் அருந்திவிட்டு, வேனின் மேலுள்ள சூட்கேசை பார்த்தபோது அங்கு இரண்டு சூட்கேஸ்கள் காணாமல் போனது தெரியவந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அருகில் உள்ள திருநாவலூர் காவல் நிலையத்தில் வேனில் இருந்த சூட்கேஸ்கள் அனைத்தும் இருக்கும் பட்சத்தில் 264 பவுன் நகைகள் இருந்த இரண்டு சூட்கேஸ்களை மட்டும் காணவில்லை என்று புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் திருநாவலூர் காவல்துறையினர் காணாமல் போன இரண்டு சூட்கேஸ்களை தேடி வருகின்றனர். மேலும், விக்கிரவாண்டி முதல் உளுந்தூர்பேட்டை வரை உள்ள அனைத்து சாலையோர உணவகங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.