கர்ப்பிணி மனைவியிடம் வரதட்சணை சித்ரவதை.. "தங்கையை கட்டிக்கொடுத்தால் வாழுவேன்"...!
கர்ப்பிணி மனைவியிடம் வரதட்சணை சித்ரவதை.. "தங்கையை கட்டிக்கொடுத்தால் வாழுவேன்"...!

மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவன், மனைவியின் தங்கையை திருமணம் செய்து வைக்க வேண்டும், சொத்தை எனது பெயருக்கு எழுதி தர வேண்டும் என தனது குடும்பத்துடன் சேர்ந்து சித்ரவதை செய்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லாடபுரம், தபால் அலுவலகம் தெருவில் வசித்து வருபவர் நாகராஜ். இவரது மனைவி அமுதா. இந்த தம்பதிக்கு கோபிநாத் என்ற மகன் இருக்கிறார். இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கோபிநாத்திற்கும், இதே ஊரை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 24) என்ற பெண்ணிற்கும், கடந்த 2020 ஆம் வருடம் நவ. 26 ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்தது.
பெண் வீட்டார் சார்பாக திருமணத்தின் போது கோபிநாத்திற்கு வரதட்சணை, சீர்வரிசை பொருட்கள் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளது. புதுமண தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், ராஜேஸ்வரி தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இந்நிலையில், ராஜேஸ்வரியிடம் கூடுதல் நகை, பணம், நிலம் வரதட்சணை கேட்டு கோபிநாத் மற்றும் அவரின் தாய் - தந்தை நாகராஜ் - அமுதா ஆகியோர் வற்புறுத்தியுள்ளனர்.
தினமும் கர்ப்பிணி என்றும் பாராமல் ராஜேஸ்வரியை தொந்தரவு செய்து, தகாத வார்த்தையால் திட்டி அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளனர். குடும்ப சூழ்நிலையால் தன்னால் வரதட்சணை வாங்கி வர இயலாது என ராஜேஸ்வரி திட்டவட்டமாக தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த கோபிநாத் மற்றும் அவரின் குடும்பத்தினர் ராஜேஸ்வரியை வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
இதனால் ராஜேஸ்வரி பெற்றோரின் இல்லத்தில் தங்கியிருக்கும் நிலையில், அவருடன் குடும்பம் நடந்த பெண் வீட்டார் சார்பில் கோபிநாத்தின் குடும்பத்தினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ராஜேஸ்வரியுடன் குடும்பம் நடந்த வேண்டும் என்றால், அவரின் தங்கையையும் எனக்கு திருமணம் செய்து தர வேண்டும், சொத்து அனைத்தையும் எனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என கோபிநாத் தரப்பு கூறியுள்ளது.
மேலும், ராஜேஸ்வரியின் தங்கையை திருமணம் செய்து வைத்தால் தான், ராஜேஸ்வரியுடன் வாழுவேன். இல்லையென்றால் குடும்பத்தையே அழித்துவிடுவேன் என கோபிநாத் மிரட்டலும் விடுத்துள்ளார். கோபிநாத் மற்றும் அவனது குடும்பத்தின் செயல்பாடுகளால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி மற்றும் அவரின் உறவினர்கள், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.