இறுதிச்சடங்கின்போது சவப்பெட்டியில் வைக்கப்பட்ட குழந்தை! திடீரென உயிர் வந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்!
இறுதிச்சடங்கின்போது சவப்பெட்டியில் வைக்கப்பட்ட குழந்தை! திடீரென உயிர் வந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்!
தஞ்சாவூர் மாவட்டம் வயலூரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி பிரித்தி. இந்த தம்பதிகளுக்கு கெவின் என்ற 1 வயது ஆண் குழந்தை இருந்துள்ளான். இந்த நிலையில் குழந்தை கெவினுக்கு சளி, காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் இன்று காலை தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், கெவின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையின் சடலத்தை எடுத்து கொண்டு சென்று இறுதிச்சடங்கு செய்தனர்.
இறுதிச்சடங்கு செய்துவிட்டு குழந்தையை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல சவப்பெட்டியில் வைத்த போது கெவினுக்கு அசைவு இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். இதனையடுத்து பரபரப்புடன் கெவினை மீண்டும் அதே மருத்துவமனைக்கு தூக்கி சென்று, குழந்தைக்கு உயிர் இருக்கு என்னவென்று பாருங்கள் என பதறியுள்ளனர்.
அப்போது மருத்துவர்கள், இப்போது தான் சில நிமிடங்களுக்கு முன்னர் கெவினின் உயிர் போயுள்ளது என கூற பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, கடும் கோபம் அடைந்தனர். குழந்தை இறந்துவிட்டான் என கூறி இறுதிச்சடங்கிற்காக வைத்திருந்து மணி நேரம் ஆன பிறகுதான் உயிர் இருப்பதை பார்த்து மருத்துவமனைக்கு கொண்டுவந்தோம். ஆனால் சில நிமிடத்திற்கு முன்பு தான் கெவின் உயிரிழந்தான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆரம்பத்திலேயே ஒழுங்காக பரிசோதனை செய்திருந்தால் குழந்தையை பற்றியிருக்கமுடியும், மருத்துவர்களின் அலட்சியப்போக்கே இதற்க்கு காரணம் என குழந்தையின் உறவினர்கள் அனைவரும் மருத்துவமனை முன்னர் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.