பள்ளிகளில் இனி இந்த பொருட்களெல்லாம் பயன்படுத்த கூடாது! தமிழக அரசு அதிரடி

பள்ளிகளில் இனி இந்த பொருட்களெல்லாம் பயன்படுத்த கூடாது! தமிழக அரசு அதிரடி



list-of-plastic-things-not-to-be-used-in-schools

வரும் ஜனவரி 1 முதல் பள்ளிகளில் 14வகையான பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த கூடாது என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

சுற்றுச்சூழல் மற்றும் மண் வளத்தை சீர்குலைக்கும் பிளாஸ்டிக் பொருட்களை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் தடை செய்வதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. எனவே பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறை சார்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

school

இந்நிலையில் எந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களை எல்லாம் பயன்படுத்தக்கூடாது என்ற பட்டியலை சுற்றறிக்கையாக பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ளது. அந்தப் பொருட்களின் பட்டியல்:  பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பூசப்பட்ட பை, நெய்யாத ப்ளாஸ்டிக் தூக்குப் பை, தெர்மக்கோல் தட்டு, உணவுப்பொருள் கட்டப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள் உறை, பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டு, நீர் நிரப்பப் பயன்படும் பை /பொட்டலம், பிளாஸ்டிக் உறிகுழாய், தெர்மக்கோல் குவளை, பிளாஸ்டிக் தேநீர்க் குவளை, பிளாஸ்டிக் குவளை, பிளாஸ்டிக் கொடி, உணவருந்தும் மேசையின் மீது விரிக்கப்படும் ப்ளாஸ்டிக் தாள் ஆகிய தடை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பொருட்கள் பள்ளியில் இருந்தால் அவற்றை முற்றிலும் அகற்றிப் பிளாஸ்டிக் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வை மாணவ, மாணவிகளிடம் ஏற்படுத்தி வீட்டிலும், வீட்டைச் சுற்றியுள்ள இடங்களிலும் பிளாஸ்டிக் இல்லாச் சூழலை உருவாக்க அறிவுரை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.