8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. கைதான நபர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்...



kumidipoondi-girl-sexual-assault-accused-arrested

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா கவரைபேட்டை பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி, 4-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 12-ந்தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில், இளைஞர் ஒருவர் சிறுமியின் வாயை மூடி தூக்கிச் சென்று மாந்தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குற்றவாளியை கைது செய்ய பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 20-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் 14 நாட்கள் தீவிர தேடுதல் மேற்கொண்டனர். குற்றவாளி குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டன. குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டது.

நேற்று தனிப்படை போலீசார், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 30 வயது வடமாநில இளைஞரை, ஆந்திராவின் சூலூர்பேட்டை ரெயில் நிலையம் அருகே கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் சூலூர்பேட்டையில் உள்ள ஓட்டலில் வேலை செய்தவர் என்றும், கஞ்சா போதைக்கு அடிமையாக இருந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று அவர் கும்மிடிப்பூண்டியில் இருந்தது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: கொடுமையின் உச்சம்... 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு... பைக்கில் அழைத்துச் சென்று நாசம் செய்த நபர்.!!

போலீசார் கைதான இளைஞரின் புகைப்படத்தை சிறுமியிடம் காட்டியபோது, அவர் தான் குற்றவாளி என உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. கைது செய்த தகவல் அறிந்ததும் சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். இதையடுத்து போலீசார் குற்றவாளியை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நேரில் விசாரணை மேற்கொண்டார். குற்றவாளியை சம்பவம் நடந்த இடத்துக்கும் அழைத்து சென்று விசாரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து தொடர்ந்து விசாரிக்க அனுமதி கோரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கெனவே POCSO சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், BNS 118, 351, 97 ஆகிய பிரிவுகளின் கீழும் கூடுதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான நபர் தற்போது கவரப்பேட்டை காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கும்மிடிப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ நேரில் விசாரணை மேற்கொண்டார். பிற்பகலில் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் குற்றவாளி ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

விசாரணையின் போது கைதான நபர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுமியும் தன்னை வன்கொடுமை செய்தவர் கைதான நபரே என உறுதிப்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 14 வயது சிறுமி கர்ப்பம்.!! 63 வயது முதியவருக்கு சாகும் வரை சிறை.!!