கன்னியாகுமரியில் பரபரப்பு...திமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்...மகளே திட்டம்போட்டு கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலம்.!
கன்னியாகுமரியில் திமுக பிரமுகரை அவரது மகளே திட்டம் போட்டு கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் குமார் சங்கர். ரீத்தாபுரம் பேரூர் திமுக செயலாளராக இருந்தவர்.இந்நிலையில் குமார் திடீரென கடந்த திங்கள் கிழமை இரவு மர்ம நபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது குமார் தினமும் குடித்து விட்டு வந்து தனது மனைவி மற்றும் மகளை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இதனால் பொறுமை இழந்த குமாரின் மூத்த மகள் தீபாவதி இதற்கெல்லாம் முடிவு கட்ட எண்ணியுள்ளார்.அதற்காக திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த நண்பரான கோபு (வயது 18) என்ற இளைஞனிடம் தந்தையை கொலை செய்யும் திட்டம் குறித்து கூறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து கோபு தனக்குத் தெரிந்த நண்பரான ஸ்ரீ முகுந்தன் என்ற வாலிபரை தொடர்புகொண்டு விபரத்தைக் கூறி, தீபாவதிக்கு அறிமுகம் செய்து வைத்து கொலை திட்டத்தை கூறினார்.அதற்காக ஸ்ரீ முகுந்தன் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். கடைசியாக 60 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்புக் கொண்டுள்ளார்.
அதனையடுத்து தீபாவதியின் திட்டம் படி ஸ்ரீ முகுந்தன் குமாரை வெட்டி கொலை செய்துள்ளார்.இவ்வழக்கில் தீபாவதி, கோபு, ஸ்ரீ முகுந்தன், ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிபோதையில் துன்புறுத்தி வந்த தந்தையை மகளே திட்டம் போட்டு கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.