மக்கள் மனதில் 'அம்மா'.. இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 9 வது நினைவு நாள்.! 



Jayalalithaa Remembrance Day: Tamil Nadu Peoples Pays Tribute to ‘Amma’ on Her 9th Death Anniversary

ஜெயலலிதாவின் 9 வது நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற முழக்கத்துடன் இன்று வரை தமிழக மக்களால் அம்மா என்று அழைக்கப்பட்டு வருபவர் ஜெயலலிதா. அவர் தொடங்கி வைத்த அம்மா உணவகம் இன்று வரை மக்களின் பசியை ஆற்றி வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த ஜெயலலிதா, 115 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் உடன் 28 படங்களில் இணைந்து நடித்துள்ளார். கடந்த 1982 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 

4 முறை முதலமைச்சர்:

முதலமைச்சராக இருந்தபோதே எம்.ஜி.ஆர் மறைந்ததால் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று கட்சி இரண்டாக உடைந்தது.  எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட பிளவினை தாண்டி பொதுச் செயலாளராக கட்சியை ஜெயலலிதா ஒருங்கிணைத்தார். 1991, 2001, 2011, 2016 என 4 முறை முதலமைச்சராக பணியாற்றிய ஜெயலலிதா, தமிழக வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினார். தமிழக மக்களால் இரும்பு பெண்மணி என்றும் அழைக்கப்பட்டார். முதல் முறையாக முதலமைச்சராக பதவி வகிக்கும் போது, சம்பளமாக ரூ.1 மட்டும் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இபிஎஸ் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. கோபியில் சோகம்.!

ஜெயலலிதா

தமிழக நலத்திட்டங்கள்:

தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம், காவல்துறையில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு, இலவச லேப்டாப், ஏழைகளுக்கு ஆடு மாடுகள் வழங்குதல், அம்மா உணவகம், திருநங்கைகளுக்கு மாதாந்திர நிதி உள்ளிட்டவைகளை அறிமுகப்படுத்தி மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், 70 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். 

மக்கள் மனதில் என்றும் 'அம்மா':

அவர் மறைந்து இன்றுடன் 9 ஆண்டு நிறைவடைந்துள்ளது. ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் என பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: #Breaking: அதிமுக தலைமைக்கு பேரிடி.. திமுகவுக்கு தாவிய Ex எம்எல்ஏ.. சூடு பிடிக்கும் தமிழக அரசியல்.!