மாணவர்களுக்காக தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்கப்படும் அரசு பேருந்துகள்!
மாணவர்களுக்காக தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்கப்படும் அரசு பேருந்துகள்!
இந்த வருட 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் இறுதிநாள் (மார்ச் 24-ஆம் தேதி) தேர்வான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகளில் சிலர் பங்குபெறமுடியவில்லை என்ற தகவல் வெளியானது. இதனால் அந்த தேர்வை எழுத முடியாத மாணவர்களின் நலன்கருதி, மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, இறுதி தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு இன்று மறுதேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 290 மையங்களில் இந்த தேர்வு நடக்க இருக்கிறது. தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என சுமார் 700-க்கும் மேற்பட்டோர் மறுதேர்வை எழுத இருப்பதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
மறு தேர்வுக்கான மையங்கள் தேர்வு எழுதும் மாணவர்கள் பள்ளியிலே அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் தேர்வு மையம் அமைக்கப்படவில்லை. மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நோய்கட்டுப்பாட்டு பகுதியில் வசிப்பவர் எவராவது இருப்பின் அவர்கள் தேர்வு மையங்களில் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மறுதேர்வு முடிந்ததும், தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீட்டு மையத்திற்கு கொண்டு சேர்க்கப்படும். நாளை மாணவர்களின் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.