அதிமுக கவுன்சிலர் படுகொலை...கொலையாளிகளுக்கு காவல்துறை வலைவீச்சு...பதற்றம்.!

மதுரையில் அதிமுக கவுன்சிலர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் மாவூத்தன்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவர் அம்மைநாயக்கனூர் பேரூராட்சியில் 10-வது வார்டு உறுப்பினராக நான்கு முறை தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் லிங்கவாடியில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் சுந்தரபாண்டியன்.
அப்போது மதுரை பாலமேடு அருகே மர்ம கும்பல் ஒன்று இவரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கியது. இந்தக் கொடூர தாக்குதலில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் சுந்தரபாண்டியன். இதனைத் தொடர்ந்து இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுந்தரபாண்டியனின் உடலை கைப்பற்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக மர்ம கும்பலை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. அதிமுக கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.