கனமழையால் பாதிக்கப்பட்ட; சீர்காழி தரங்கம்பாடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம்... முதல்வர் உத்தரவு..!!
கனமழையால் பாதிக்கப்பட்ட; சீர்காழி தரங்கம்பாடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம்... முதல்வர் உத்தரவு..!!
கன மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில் வசிக்கும் குடும்ப அட்டைக்கு 1,000 ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. சீர்காழியில் மட்டும் 122 வருடங்களில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். சீர்காழியில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், பாய், போர்வை போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் இருக்கும் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்த முதலமைச்சர். குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.